6 அடி உயரத்துக்கு மின்வேலி!

களக்காடு மலையடிவாரத்தில் 8 கிலோ மீட்டர் தூரம்
6 அடி உயரத்துக்கு மின்வேலி அமைக்கப்படுகிறது
புலிகள் சரணாலய துணை இயக்குனர் பேட்டி


களக்காடு, டிச.5-

தோட்ட பயிர்களை மிருகங்கள் அழிப்பதை தடுக்க களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் மின்வேலி அமைக்கும் பணிகள் தொடங்கியது. இந்த மின்வேலி 6 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது என்று புலிகள் சரணாலய துணை இயக்குனர் வெங்கடேஷ் கூறினார்.

விலங்குகள் அட்டகாசம்

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கடந்த சில வருடங்களாக காட்டு மிருகங்களின் அட்டகாசங்கள் அதிகரித்து வந்தது. காட்டு யானை, மிளா, பன்றி, கரடி போன்ற மிருகங்கள் கூட்டம் கூட்டமாக விவசாய விளைநிலங்களில் புகுந்து வாழை, நெல், தென்னை, பனை போன்ற பயிர்களை நாசப்படுத்தி வந்தன.

இதை தடுக்க, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, காட்டு விலங்குகளால் அதிகப்படியாக விளைநிலங்கள் பாதிக்கப்படும் இடங்களை தேர்வு செய்து சோலார் மின்வேலி அமைக்க அரசு முடிவு செய்தது.

மின் வேலி

அதன் அடிப்படையில் களக்காடு அருகே உள்ள பத்மநேரி இசக்கி அம்மன் கோவிலில் இருந்து மஞ்சவிளையில் உள்ள வடக்கு பச்சையாறு அணைவரை 2 கிலோமீட்டர் தூரத்திலும், அதே போன்று வடகரையில் இருந்து தலையணை பகுதி வரை 3 கிலோமீட்டர் தூரமும், திருக்குறுங்குடி சரகத்தில் மலையடிபுதூர் பகுதியில் 3 கிலோமீட்டர் தூரத்திலும் மொத்தம் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு மின்வேலி அமைக்கப்படுகிறது.

ஒரு கிலோமீட்டருக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வீதம் மொத்தம் 8 கிலோமீட்டருக்கு ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் செலவில் காட்டு மிருகங்கள் பயிர்களை தாக்காதவண்ணம் மின்வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

அதிகாரி பேட்டி

இதுகுறித்து களக்காடு புலிகள் சரணாலய துணை இயக்குனர் மற்றும் வனஉயிரின காப்பாளர் வெங்கடேஷ் கூறியதாவது:-

தற்போது மத்திய-மாநில அரசுகளின் நிதிஉதவி மூலம் களக்காடு மலை அடிவாரத்தில் 8 கிலோ
மீட்டர் தூரம் வரை, காட்டு மிருகங்களிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க மின்வேலி அமைக்கப்படுகிறது. அடுத்த வருடமும் இதேபோன்று நிதிஒதுக்கீடு செய்வதன் மூலம் ஓரளவு பணி நிறைவு பெற்று
விடும்.

இந்த மின்வேலி 6 அடி உயரம் உள்ளது. இதனால் எந்த மிருகங்களும் காட்டைவிட்டு தோட்டங்களுக்குள்ளோ, ஊருக்குள்ளோ வராது. இந்த மின்வேலிகள் சோலார் பேட்டரி மூலம் இயங்குகிறது.

பராமரிப்பு குழு

ஏற்கனவே உள்ள மின்வேலிகளை பராமரிக்கவும் ஏற்பாடு செய்து உள்ளோம். மின்வேலிகள் பராமரிப்புக்கு குழு அமைத்து உள்ளோம். ஒவ்வொரு குழுவும் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை மின்வேலியை
பராமரித்து கொள்வார்கள்.

இவ்வாறு களக்காடு புலிகள் சரணாலய துணை இயக்குனர் மற்றும் வனஉயிரின காப்பாளர்
வெங்கடேஷ் கூறினார்.

இதுபற்றி மூன்றடி விவசாயியும், முன்னாள் நகர பஞ்சாயத்து உறுப்பினருமான கே.ராஜேந்திரன் கூறியதாவது:-

இதுபோன்று மின்வேலி எல்லா இடங்களிலும் அமைக்க வேண்டும். விலங்குகள் மின்வேலியை தாண்டி வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

Labels: ,