அணுசக்தி ஒப்பந்தம்!

அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு
டெல்லி மேல்-சபையில் கனிமொழி முதல் பேச்சு
பிரதமர் பாராட்டு





புதுடெல்லி, டிச.5-

அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி. டெல்லி மேல்-சபையில் தனது கன்னிப்பேச்சில் கூறினார். இந்த பேச்சுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி. நேற்று முதல் முறையாக டெல்லி மேல்-சபையில் தனது கன்னிப்பேச்சின் போது அணுசக்தி ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்து பேசியதாவது:-

கன்னிப்பேச்சில்

நான் இந்த அவையிலே அடக்கத்துடனும், நம்பிக்கையுடனும் பேச எழுகிறேன். என்னுடைய இந்த கன்னிப்பேச்சில், மதிப்பு மிகுந்த இந்த அவையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த 123 ஒப்பந்தம் குறித்து நான் சார்ந்திருக்கும் கட்சியின் சார்பில் கருத்துக்கூறும் வாய்ப்பினை பெற்றமைக்கு நான் பெரிதும் மகிழ்கிறேன்.

இந்த ஒப்பந்தம் போர் அல்லாத அணுசக்தி தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை தரும் என்பதோடு, கடந்த 33 ஆண்டுகளாக நம்மீது திணிக்கப்பட்ட தடைகளும் நீக்கப்படும் என்பதோடு ராணுவத்திற்கான அணுசக்தி திட்டத்தில் நமக்குள்ள சுதந்திரமும் பாதுகாக்கப்படும்.

சிலர் இது முறையற்ற ஒரு சார்பு ஒப்பந்தம் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் அமெரிக்க ஏடுகளுக்கு அளித்த ஒரு பேட்டியில் அமெரிக்காவின் சார்புச் செயலாளர் நிக்கோலஸ் பர்ன்ஸ், "இதுபோன்றதொரு ஒப்பந்தத்தை அமெரிக்கா, உலகில் உள்ள வேறு நாடுகளோடு செய்து கொள்ளாது. இந்தியா மட்டும் விதிவிலக்கு'' என்று கூறியுள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக

இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தையும், இதில் உள்ள நுணுக்கங்களையும் பார்க்கும்போது, மக்களிடையே இது குறித்த சந்தேகங்களும், பல்வேறு கேள்விகளும் எழுவது நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அவற்றில் சில நியாயமானவையாகவும், சில அரசியல் காரணங்களுக்காகவும் உள்ளன.

நாட்டின் வளர்ச்சி என்ற அடிப்படையில், எங்கள் கட்சியின் தலைவர் கலைஞர், இந்த 123 ஒப்பந்தம் குறித்து கருத்து வேறுபாடுகள், இந்த அரசாங்கத்தை வலுவிழக்க செய்துவிடக்கூடாது. நிர்வாகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்று கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் முறையாக விவாதிக்கப்பட்டு சரியாக புரிந்து கொள்ளப்பட்டால், கவலைகள் நீங்கி கருத்தொற்றுமை ஏற்படும் என்று எங்கள் கட்சியின் தலைவர் நம்புகிறார்.

நமக்கு 2020-ம் ஆண்டு வாக்கில் 20 ஆயிரம் மெகாவாட் அணு உலைகள் மூலம் மின் உற்பத்தி செய்ய வேண்டுமென்கின்ற திட்டமிருக்கிறது. ஆனால் இந்த 123 ஒப்பந்தம் ஏற்பட்டிருக்காவிட்டால், இந்த நிலையை எய்துவது கடினம்.

எனவே நாம் யுரேனியம் போன்ற அணுசக்திப் பொருட்களை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. நமது நாட்டிலேயே உற்பத்தியாகும் தோரியத்தைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யலாம். ஆனால் அதற்கு பலகாலம் பிடிக்கும்.

முதல் அடி வைக்க

புளூட்டோனியத்தை பயன்படுத்தியும் மின் உற்பத்தி செய்யலாம். புளூட்டோனியம், தோரியம் ஆகியவற்றின் கலவையைக் கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரம் தற்போதுள்ள அணுமின் நிலையங்களின் உற்பத்தியைவிட முப்பது மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த இலக்கை அடைவதற்கு நாம் முதல் அடியை எடுத்து வைத்தாக வேண்டும்.

சில சுற்றுச்சூழல் அறிஞர்கள், சூரிய ஒளி மற்றும் காற்றாலைகள் மூலமாக மின் உற்பத்தி செய்வது நன்மை தரும் என்று கருதுகிறார்கள். ஆனால் அவற்றால் நமக்குத் தேவையான அளவிற்கு மின்சாரத்தை வழங்க இயலாது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். நான் இது போன்ற மின் உற்பத்தி நிலையங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவை பயனுள்ளவை என்பதோடு மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவை நமக்கு தேவையான அளவில் ஒரு குறிப்பிட்ட சதவீதமே பங்கு வகிக்க முடியும்.

உணவு உற்பத்தி பாதிக்கும்

தற்போது கரும்பிலிருந்து உற்பத்தியாகும் எத்தனால் போன்ற பொருட்களை கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம் என்ற கருத்தும் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இந்த உலகத்தில் உள்ள உழக்கூடிய நிலங்கள் அனைத்திலும் கரும்பை பயிரிட்டாலும் கூட நமக்கு தேவையான மின் உற்பத்தி இலக்கை எட்ட முடியாது. மேலும், உணவு உற்பத்தியும் பாதிக்கப்படும்.

2100-ம் ஆண்டு வாக்கில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு முற்றிலுமாக தீர்ந்துவிடக்கூடிய சூழ்நிலையும் உருவாகும் என்று கருத்து நிலவுகிறது. அதற்குப்பின்னர், நிலக்கரி மட்டுமே மின் உற்பத்திக்கு பயன்படும்.

அதிக அளவில் நிலக்கரியை பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல. அதனால் ஏற்படும் விளைவுகள் பூமியின் வெப்பத்திற்கு காரணமாக விளங்குகின்றன.

ஒரு கிராம் யுரேனியம், ஒரு டன் நிலக்கரி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை ஈடு செய்யும். செலவிடப்பட்ட எரிபொருள் சுத்திகரிக்கப்பட்டு, அதிலிருந்து 97 சதவீத எரிபொருளை மீட்டு, மறுபடியும் பயன்படுத்தலாம்.

மின் உற்பத்தி

உலக அணுசக்தி வணிகம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், 123 ஒப்பந்தம்தான் அணுசக்தி தொழில் நுட்பத்தையும், அதற்கான கச்சா பொருளையும் நாம்பெறக்கூடிய வாய்ப்பினை உருவாக்கும். அதன் மூலம்தான் நாம் நம்முடைய மின் உற்பத்தி தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியும்.

நாம் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நிலையில், அணுசக்தி வினியோகிக்கும் உரிமை நமக்கு இல்லை. இதன்காரணமாக அணுசக்தி வினியோகிக்கும் 45 நாடுகள் குழுவோடு வணிக ஒப்பந்தம் செய்து கொள்வதில் நமக்கு சிக்கல் ஏற்படும். நம்மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக, நாம் இரு பயன்பாட்டு தொழில் நுட்பத்தை பெறுவதற்கு அனுமதி இல்லாத நிலை இருக்கிறது.

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற அணுமின் உற்பத்தி குறித்த இந்தியா-பிரான்ஸ் கூட்டுச் சந்திப்பில் அணுசக்தி தொழில்நுட்பத்தை நமக்கு வழங்க இயலாத நிலையை பிரான்ஸ் நாடு தெரிவித்து விட்டது. நம்மோடு மிகுந்த நட்போடு இருந்த ரஷ்யாவும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வழங்குவதாக ஒப்புக் கொண்டிருந்த ரியாக்டர்களை வழங்க மறுத்துவிட்டது.

முதலீடு பயன்படாமல்

பிரதமர் ராஜீவ்காந்தியும்-சோவியத் அதிபர் மைக்கேல் கோர்பச்சேவும் 1985-ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நமக்கு இவற்றை ரஷ்ய அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், சோவியத் நாடு துண்டுபட்ட பிறகு, ரஷ்யா அணுசக்தி வினியோகிப்போர் குழுவில் இணைந்து கொண்டது. ஆகவே அவர்கள் நம்முடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கடைபிடிக்க முடியவில்லை.

இதன்காரணமாக கூடங்குளம் அணுமின் உற்பத்தி திட்டம் தாமதமாகிறது. மத்திய அரசின் ரூ.26 ஆயிரம் கோடி முதலீடு பயன்படாமல் இருக்கிறது.

அணுசக்தி வினியோகிக்கும் நாடுகளோடு நாம் செய்து கொள்ளும் எந்த ஒப்பந்தமானாலும், நாம் நம்முடைய அணு ஆயுத கொள்கையினை விட்டுக் கொடுப்பதாகும் என்ற கருத்தும் கூறப்படுகிறது. நம்முடைய அணுசக்தி திறமைகளை கொண்டு ஆயுத உற்பத்தி செய்யும் முயற்சி எளிதில் ஏற்பட்டதல்ல. 1998-ம் ஆண்டில் நாம் மேற்கொண்ட முடிவினை எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

பாதுகாப்பில் சமாதானமில்லை

இந்த 123 ஒப்பந்தம் ராணுவ நிர்மாணங்களையும், உள்நாட்டுத் தேவைகளையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கும் உரிமையை நமக்கு வழங்கியிருப்பதால், நம்முடைய பாதுகாப்புத் தேவைகளில் நாம் எந்தவிதமான சமாதானமும் செய்து கொள்ள தேவையில்லை.

இந்த 123 ஒப்பந்தம் இந்திய, அமெரிக்க உறவை உறுதி செய்திருந்தாலும், அணுசக்தி தொழில் நுட்ப வணிகத்தில் நாம் மற்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி அணுசக்தி எரிபொருளை வழங்காமல் நிறுத்திவிடவும், அதற்கான கருவிகளை ஓராண்டு கால எச்சரிக்கை வழங்கி, திரும்பப் பெற்றுக்கொள்ளவும் விதிகள் இடமளிக்கின்றன என்று கூறப்படுகிறது.

எனவே, இந்தியா அமெரிக்காவிடமிருந்து மட்டுமே அணுசக்தி தொழில் நுட்பத்தை பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதையும், பிரான்ஸ், கனடா போன்ற இதர நாடுகளோடும் அணுசக்தி வணிக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதையும் அரசு இந்த அவைக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அரசு அறிவிக்க வேண்டும்

மேலும், அமெரிக்கா எரிபொருள் வழங்குவதை நிறுத்திவிட்டால், மற்ற நாடுகளிடமிருந்து நாம் எரிபொருள் பெற இயலுமா என்று இந்த அவைக்கு அரசு தெரிவிக்க வேண்டும்.

இந்த விவரங்கள் எல்லாம் மிக முக்கியமானவையாக இருந்தாலும், இவை காரணமாக நாம் இதனினும் பெரிய ஆதாயத்தை கருத்தில் கொண்டு நாம் நமது எண்ணத்தை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை.

இந்த 123 ஒப்பந்தம் தானாக உருவாகவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு வித்திட்ட பாரதீய ஜனதா கட்சி, அமெரிக்காவோடு அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கிய நேரத்தில் நம்முடைய வளர்ச்சித் திட்டங்களுக்கு மிக முக்கியமானது என்று கருதியே பேச்சு நடத்தியது.

ஏழ்மையிலிருந்து விடுவிப்பது

நம்முடைய இந்த வளர்ச்சி திட்டம் என்பது 30 கோடி மக்களை ஏழ்மையிலிருந்து விடுவிப்பது, சாதி மற்றும் பால் வேறுபாடுகளிலிருந்து மக்களை விடுவிப்பது, கிராமப்புற மேம்பாடு, கல்வி வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

இந்த அவையில் 1962-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எங்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் பேரறிஞர் அண்ணா, சீனப்படையெடுப்பின்போது ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதியை மேற்கோள்காட்டி எனது உரையினை நிறைவு செய்ய விரும்புகிறேன். இந்த நாட்டின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை பாதுகாக்க உருவாகியுள்ள கவுரவப் பட்டியலில் தி.மு.க.வின் பெயரையும் இணைத்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி. கூறினார்.

மன்மோகன்சிங் பாராட்டு

டெல்லி மேல்-சபை தி.மு.க. உறுப்பினர் கவிஞர் கனிமொழியின் உரையை அனைவரும் ரசித்துகேட்டனர். இவர் உரையாற்றி முடிந்ததும் பிரதமர் மன்மோகன்சிங் கனிமொழியின் பேச்சை உடனடியாக பாராட்டினார். மிகச்சிறந்த தங்கள் உரைக்கு எனது பாராட்டுக்கள் என்று ஒரு சீட்டில் எழுதி தனது பாராட்டுக்களை பிரதமர் மன்மோகன்சிங், கவிஞர் கனிமொழியிடம் தெரிவித்தார். மத்திய மந்திரி கபில் சிபல் நேரில் கைகுலுக்கி தனது பாராட்டுக்களை தெரிவித்தார். மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, சுரேஷ் பச்சோரி, ஆனந்த் சர்மா, பட்டேல், மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு மேல்-சபை உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் தி.மு.க. எம்.பி.க்களும் பாராட்டினார்கள்.

Labels: ,